ஒரு இந்திய சிற்றூர் சூழலில், சிறுபிள்ளை காதலால், ஊரார் ஏசலுக்கு அஞ்சி பிரிந்த காதலர் இருவர் நண்பன் இல்லத்தில், நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஒருவரை ஒருவர் காண நிகழ்ந்தது...
"
பேசலாமா?
பேசினால் ஏசுவாரோ?
இவருள் இப்பொழுதும் காதல் உண்டு என்பாரோ?
உருகிவிடுவேனோ, பேசினால்?
இயல்பாய் இருத்தலும் ஆகுமோ என்னால்?" எண்ணினான் அவன்.
அவளைப் பார்த்தான்.
அவள் கண்களைக் கண்டான் .
காண முடியாது
உடனே வேறெங்கோ நோக்கினான்.
"அவள் மனதைக் கொன்றது நான் அன்றோ", எண்ணினான்
"காணேன். அவள் கண் கண்டால் என் கண்ணில் கண்ணீர் திண்ணம்".
அவள் 'திருவடியைப்' பார்க்கிறான்.
அவள் மிகுந்த தயக்கத்துடன்
யாருக்கும் கேட்கா ஓசையில் கேட்டாள்,
"சுகமா?"
அவள் வாய் திறக்கவில்லை.
கண்ணும் அசையவில்லை.
அனால் அவள் சொன்னது இவனுக்கு மட்டும் கேட்டது.
காலை மட்டும் நோக்கியவாறு
தலையை அசைத்தான்
"சுகம்" என்று சொன்னாற்போல.
இருவர் கண்களும் எதையும் காணவில்லை.
கண்களை மூடியது,
இமைகள் அல்ல,
தேம்பி நிற்கும் கண்ணீர்.
யாரோ கத்தினார்..
"கேக் வெட்டலாம். டைம் ஆயிருச்சு" என்று.
ஒன்றும் நடக்காதது போல் நகர்ந்தான்
இவன் விழாவில்
சிரித்தான்.
குதூகலித்தான்
பாவம், அவளைத் தவிர
வேறு யாரும் உணரவில்லை,
அவன் சிரிப்பும் புன்னகையும் போலி என்று.
பிறந்தநாள் விழா முடிந்தது
ஆனால் இவர் மனதில் பூகம்பம்?
முடியவில்லை...
என்று முடியும் அது?
விடை அறிந்தவன் ஒருவனே...
அவன் தான்
காலம்...
No comments:
Post a Comment